search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தோவாளை பூ மார்க்கெட்"

    • வியாபாரிகள் பிச்சி, மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கினார்கள்.
    • மல்லிகைப்பூ கிலோ ரூ. 300-க்கு விற்கப்பட்ட வந்த நிலையில் இன்று ரூ.600 ஆக உயர்ந்திருந்தது.

    ஆரல்வாய்மொழி:

    தோவாளை பூ மார்க்கெட் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு ஆரல்வாய்மொழி, குமாரபுரம், ராதாபுரம், மாடநாடான் குடியிருப்பு, புதியம்புத்தூர் பகுதிகளில் இருந்து பூக்கள் அதிகளவு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.

    மேலும் கோவில்பட்டி, மானாமதுரை, திண்டுக்கல் பகுதிகளில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக வருகிறது. சேலம், பெங்களூரு, ஓசூர் பகுதியில் இருந்து அரளி, மஞ்சள் கேந்தி பூக்களும், தென்காசி பகுதியில் இருந்து பச்சை துளசி பூக்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. பூக்களை வாங்குவதற்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான வியாபாரிகள் தோவாளை பூ மார்க்கெட்டிற்கு வருகிறார்கள். கடந்த சில நாட்களாக பிச்சி, மல்லிகை பூக்களின் விலை சற்று குறைவாக காணப்பட்டது.

    இந்த நிலையில் இன்று சுபமுகூர்த்தம் என்பதால் தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்களை வாங்குவதற்கு காலையிலேயே கூட்டம் அலைமோதியது. வியாபாரிகள் பிச்சி, மல்லிகை பூக்களை போட்டி போட்டு வாங்கினார்கள். இதனால் பிச்சி, மல்லிகை பூக்களின் விலை இன்று உயர்ந்து காணப்பட்டது.

    பிச்சிப்பூ கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் இன்று இரு மடங்கு உயர்ந்து கிலோ ரூ. 1110-க்கு விற்கப்பட்டது. மல்லிகைப்பூ கிலோ ரூ. 300-க்கு விற்கப்பட்ட வந்த நிலையில் இன்று ரூ.600 ஆக உயர்ந்திருந்தது. இதே போல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது. அரளிப்பூ கிலோ ரூ130, சம்பங்கி ரூ. 300, கேந்தி ரூ.80, மஞ்சள்கேந்தி ரூ.90, வாடாமல்லி ரூ. 60, பட்டன் ரோஸ் ரூ.160, துளசி ரூ.30, கனகாம்பரம் ரூ.300-க்கு விற்கப்பட்டது. பூக்கள் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களாக பூக்கள் விலை குறைவாகவே காணப்பட்டது. இதனால் பூக்கள் பறிப்பதற்கு ஆன செலவு மற்றும் கூலியை விட குறைவான அளவில் வருமானம் கிடைத்து வந்தது. இன்று பூக்களின் விலை உயர்ந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    ×